வெள்ளி, 19 பிப்ரவரி, 2016

திருக்கானாட்டுமுள்ளூர் திருமுறை பதிகம்

இறைவர் திருப்பெயர் : ஸ்ரீ பதஞ்சலி ஈஸ்வரர்

இறைவியார் திருப்பெயர் : ஸ்ரீ கானார் குழலி, ஸ்ரீ அம்புஜாட்சி

திருமுறை : ஏழாம் திருமுறை 40 வது திருப்பதிகம்

அருளிச்செய்தவர் : சுந்தரமூர்த்தி சுவாமிகள்


பதஞ்சலி வழிபட்டடு பேறு பெற்றத் தலம். பாற்கடலில் ஆதிசேஷன் மீது பள்ளி கொண்டிருக்கும் மகாவிஷ்ணுவிடம் சிவபெருமானின் நடனத்தை தரிசனம் செய்யும் விருப்பத்தை வெளியிட்டார் ஆதிசேஷன். மகாவிஷணுவின் ஆணைப்படி பதஞ்சலி முனிவராக அவதாரம் எடுத்து சிவபெருமானை நோக்கி தவம் இருந்தார். சிவன் அவருக்கு சிதம்பரத்தில் தன் நடனக் காட்சியை காட்டி அருளினார். பதஞ்சலி முனிவர் ஒருமுறை இத்தலத்திற்கு வந்தார். வந்த இடத்தில் சிவபெருமானின் நடனத்தைக் காணவேண்டும் என்று விருமினார். அவருக்கு சிவன் இத்தலத்திலும் தன் நடனத்தைக் காட்டி அருள் செய்தார். பதஞ்சலி ஈஸ்வரர் என்ற பெயரையும் இத்தல இறைவன் பெற்றார்.


பாடல் எண் : 01
வள்வாய மதிமிளிரும் வளர் சடையினானை 
மறையவனை வாய்மொழியை வானவர்தம் கோனை
புள்வாயைக் கீண்டுலகம் விழுங்கி உமிழ்ந்தானைப் 
பொன்னிறத்தின் முப்புரிநூல் நான் முகத்தினானை 
முள்வாய மடல் தழுவி முடத்தாழை ஈன்று 
மொட்டலர்ந்து விரைநாறும் முருகுவிரி பொழில்சூழ்
கள்வாய கருங்குவளை கண் வளரும் கழனிக் 
கானாட்டு முள்ளூரில் கண்டு தொழுதேனே.

பாடல் விளக்கம்:
கூரிய வாயை உடைய பிறை ஒளிரும் நீண்ட சடையை உடையவனும், "வேதம் வாயாற் சொல்லப்படும் பிற சொற்கள், இந்திரன், திருமால், பிரமன்" என்னும் பொருள்களாய் உள்ளவனும் ஆகிய இறைவனை, அடியேன், தாழையரும்புகள், வளைந்த தாழை மரத்தினால் ஈன்றிடப்பட்டு, முட்களையுடைய வாயினையுடைய இதழ்களைப் பொருந்தி மலர்ந்து மணம் வீசுகின்ற, தேன் மிகுந்த சோலைகள் சூழ்ந்த, மதுவொழுகும் வாயினையுடைய கருங்குவளை மலர்கள் கண்ணுறங்குவது போலக் காணப்படுகின்ற வயல்களையுடைய திருக்கானாட்டு முள்ளூரிற் கண்டு வணங்கப்பெற்றேன். இஃது என் தவப்பயன் இருந்தவாறு!.


பாடல் எண் : 02
ஒருமேக முகிலாகி ஒத்துலகம் தானாய் 
ஊர்வனவும் நிற்பனவும் ஊழிகளும் தானாய்ப்
பொருமேவு கடலாகிப் பூதங்கள் ஐந்தாய்ப் 
புனைந்தவனைப் புண்ணியனைப் புரிசடையினானைத்
திருமேவு செல்வத்தார் தீ மூன்றும் வளர்த்த 
திருத்தக்க அந்தணர்கள் ஓதும் நகர் எங்கும் 
கருமேதி செந்தாமரை மேயும் கழனிக் 
கானாட்டு முள்ளூரில் கண்டு தொழுதேனே.

பாடல் விளக்கம்:
உலகிற்கு ஒரு பெருந்துணையாய் உள்ள மேகமாகியும், தம்முள் ஒத்த உலகங்கள் பலவும் தானேயாகியும், அவற்றில் உள்ள ஊர்வனவும், நிற்பனவுமாகிய உயிர்களும், அவற்றின் தோற்ற ஒடுக்கங்கட்குக் காரணமாகிய ஊழிக் காலங்களும் தானே யாகியும், அலையால் கரையை மோதுகின்ற கடல்களாகியும், ஐந்து பூதங்களாகியும் அவற்றைப் படைத்து நிற்பவனும், அறவடிவினனும், புரிந்த சடையை உடையவனும் ஆகிய இறைவனை, அடியேன், திருமகளும் விரும்பத்தக்க செல்வத்தை உடையவர்களது மாளிகைகளும், முத்தீயையும் வளர்க்கின்ற மேலான தகுதியுடைய அந்தணர்கள் வேதத்தை ஓதி வாழ்கின்ற மாளிகைகளும் உள்ள இடங்களிலெல்லாம், கரிய எருமைகள் செந்தாமரை மலர்களை மேய்கின்ற வயல் களையுடைய திருக்கானாட்டுமுள்ளூரிற் கண்டு வணங்கப்பெற்றேன். இஃது என் தவப்பயன் இருந்தவாறு.


பாடல் எண் : 03
இரும்பு உயர்ந்த மூவிலைய சூலத்தினானை 
இறையவனை மறையவனை எண் குணத்தினானைச்
சுரும்பு உயர்ந்த கொன்றையொடு தூமதியம் சூடும் 
சடையானை விடையானை சோதியெனும் சுடரை
அரும்பு உயர்ந்த அரவிந்தத்து அணி மலர்கள் ஏறி 
அன்னங்கள் விளையாடும் அகன் துறையின் அருகே 
கரும்பு உயர்ந்து பெருஞ்செந்நெல் நெருங்கிவிளை கழனிக் 
கானாட்டு முள்ளூரில் கண்டு தொழுதேனே.

பாடல் விளக்கம்:
வலிமை மிகுந்த மூன்று இலைகளை உடைய சூலத்தை உடையவனும், இறைவனும், வேதத்தை ஓதுபவனும், எட்டுக் குணங்களை உடையவனும், வண்டுகள் மேலே சூழ்கின்ற கொன்றை மாலையோடு, வெள்ளிய சந்திரனைச் சூடிய சடையை உடையவனும், இடபத்தை ஏறுபவனும், "சுயஞ்சோதி" எனப்படுகின்ற ஒளியானவனும் ஆகிய இறைவனை, அடியேன், அன்னப்பறவைகள், அரும்புகள் மேலெழுந்து காணப்படுகின்ற தாமரையினது ஒப்பற்ற மலர்களின்மேல் ஏறி விளையாடுகின்ற, அகன்ற நீர்த்துறையின் அருகே கரும்புகள் வளரப்பட்டு, செந்நெற்பயிர்கள் செறிந்து விளைகின்ற வயல்களையுடைய திருக்கானாட்டுமுள்ளூரிற் கண்டு வணங்கப்பெற்றேன். இஃது என் தவப்பயன் இருந்தவாறு.


பாடல் எண் : 04
பூளை புனை கொன்றையொடு புரிசடையினானைப் 
புனலாகி அனலாகி பூதங்கள் ஐந்தாய்
நாளை இன்று நெருநலாய் ஆகாயமாகி 
ஞாயிறாய் மதியமாய் நின்ற எம்பரனை
பாளைபடு பைங்கமுகின் சூழல் இளந்தெங்கின் 
படுமதஞ்செய் கொழுந்தேறல் வாய்மடுத்துப் பருகிக்
காளை வண்டு பாடமயில் ஆலும் வளர் சோலைக் 
கானாட்டு முள்ளூரில் கண்டு தொழுதேனே.

பாடல் விளக்கம்:
பூளைப் பூவையும், அழகிய கொன்றை மாலையையும், புரித்த சடையின்கண் உடையவனும், நீராகியும், நெருப்பாகியும், ஐம்பூதங்களாகியும், "நாளை, இன்று, நேற்று" என்னும் நாள்களாகியும், பரவெளியாகியும், சூரியனாகியும், சந்திரனாகியும் நிற்கின்ற எங்கள் இறைவனை, அடியேன், பாளைகள் உளவாகின்ற, பசிய கமுகுகளினது செறிவினிடத்தே உள்ள இளமையான தென்னையினது, மிக்க மயக்கத்தை உண்டாக்குகின்ற கள்ளினை இளைய ஆண் வண்டுகள் உட்கொண்டு திளைத்து இசையைப் பாட, மயில்கள் ஆடுகின்ற, உயர்ந்த சோலையையுடைய, திருக்கானாட்டுமுள்ளூரிற் கண்டு வணங்கப் பெற்றேன். இஃது என் தவப்பயன் இருந்தவாறு.


பாடல் எண் : 05
செருக்கு வாய்ப் பைங்கண் வெள்ளரவு அரையினானைத்
தேவர்கள் சூளாமணியைச் செங்கண் விடையானை
முருக்கு வாய் மலர் ஒக்கும் திருமேனியானை 
முன்னிலையாய் முழுது உலகமாய பெருமானை
இருக்கு வாய் அந்தணர்கள் எழுபிறப்புள் எங்கும் 
வேள்வி இருந்து இரு நிதியம் வழங்கும் நகரெங்கும் 
கருக்கு வாய்ப் பெண்ணையொடு தெங்குமலி 
சோலை கானாட்டு முள்ளூரில் கண்டு தொழுதேனே.

பாடல் விளக்கம்:
சீறுகின்ற வாயினையும், பசிய கண்களையும் உடைய, வெள்ளிய பாம்பினை அரையிற் கட்டியவனும், தேவர்கள் முடியிற் பதிக்கும் மணிபோன்றவனும், சிவந்த கண்களையுடைய இடப ஊர்தியை உடையவனும், முருக்க மரத்தின்கண் பொருந்தியுள்ள மலர்போலும் திருமேனியை உடையவனும், எல்லாவற்றிற்கும் சான்றாய் நிற்பவனும், உலகமுழுதும் தானேயாய் நிறைந்தவனும் ஆகிய இறைவனை, அடியேன், எழுவகைப் பிறப்பினவாகிய உயிர்கள் உள்ள இடங்களில் எல்லாம் வேதத்தை ஓதுகின்ற அந்தணர்கள் வேள்வி வேட்டிருத்தலால், அவர்கட்கு மிக்க நிதிகளை வழங்குகின்ற மாளிகையின் பக்கங்களில் எல்லாம், கருக்குவாயினையுடைய பனைமரங்களும், தென்னை மரங்களும் நிறைந்த சோலைகளையுடைய திருக்கானாட்டுமுள்ளூரிற் கண்டு வணங்கப்பெற்றேன். இஃது என் தவப்பயன் இருந்தவாறு.


பாடல் எண் : 06
விடையரவக் கொடியேந்தும் விண்ணவர் தம் கோனை 
வெள்ளத்து மாலவனும் வேத முதலானும் 
அடியிணையும் திருமுடியும் காண அரிதாய 
சங்கரனைத் தத்துவனைத் தையல் மடவார்கள் 
உடை அவிழக் குழல் அவிழக் கோதை குடைந்து ஆடக் 
குங்குமங்கள் உந்திவரு கொள்ளிடத்தின் கரைமேல்
கடைகள் விடுவார் குவளைகளை வாரும் கழனிக் 
கானாட்டு முள்ளூரில் கண்டு தொழுதேனே.

பாடல் விளக்கம்:
எருதினை எழுதிய ஒலிக்குங் கொடியை ஏந்துகின்ற தேவர் பெருமானும், நீரில் துயில்கின்ற திருமாலும், வேதத்திற்குத் தலைவனாகிய பிரமனும் அடி இணையையும், அழகிய முடியினையும் காண்டல் அரிதாகிய, `சங்கரன்` என்னும் காரணப் பெயரை உடையவனும், மெய்ப்பொருளானவனும் ஆகிய இறைவனை, அடியேன், இளைய பெண்கள் தங்கள் உடை அவிழவும், மாலையை அணிந்த கூந்தல் அவிழவும் மூழ்கி விளையாடுதலால் கிடைத்த குங்குமச் சேற்றைத் தள்ளிக்கொண்டு வருகின்ற கொள்ளிட நதியின் கரைமேல் உள்ள, கடையர்கள் தாங்கள் களைந்த நீண்ட குவளைக் கொடிகளைச் சேர்த்து எடுக்கின்ற திருக்கானாட்டுமுள்ளூரிற் கண்டு வணங்கப்பெற்றேன். இஃது என் தவப்பயன் இருந்தவாறு.


பாடல் எண் : 07
அருமணியை முத்தினை ஆனஞ்சும் ஆடும் 
அமரர்கள் தம் பெருமானை அருமறையின் பொருளைத்
திருமணியைத் தீங்கரும்பின் ஊறலிருந் தேனைத் 
தெரிவரிய மாமணியைத் திகழ்தரு செம்பொன்னைக் 
குருமணிகள் கொழித்து இழிந்து சுழித்து இழியும் திரைவாய்க் 
கோல்வளையார் குடைந்தாடும் கொள்ளிடத்தின் கரைமேல்
கருமணிகள் போல் நீலம் மலர்கின்ற கழனிக்  
கானாட்டு முள்ளூரில் கண்டு தொழுதேனே.

பாடல் விளக்கம்:
அரிய மணியாகிய மாணிக்கம் போல்பவனும், முத்துப்போல்பவனும், ஆனைந்தினை ஆடுகின்ற தேவர் பெருமானும், அரிய வேதத்தின் பொருளாய் உள்ளவனும், அழகிய பிற மணிகள் போல்பவனும், இனிய கரும்பினின்றும் வடிதலையுடைய மிக்க சாறுபோல்பவனும், அறிதற்கரிய மணியாகிய சிந்தாமணி போல்பவனும், மாற்று விளங்குகின்ற செம்பொன் போல்பவனும் ஆகிய இறைவனை, அடியேன் முன்னே, நிறம் பொருந்திய மணிகளைக் கொழித்து மலையினின்றும் பாய்ந்து, பின்பு நிலத்தில் சுழித்துக் கொண்டு ஓடுகின்ற, அலைகளுக்கிடையில், வரிசையான வளையல்களை அணிந்துள்ள மகளிர் மூழ்கி விளையாடுகின்ற கொள்ளிட நதியின் கரைமேல் உள்ள, நீலோற்பல மலர்கள் நீலமணிபோல மலர்கின்ற வயல்களையுடைய திருக்கானாட்டுமுள்ளூரிற் கண்டு வணங்கப்பெற்றேன். இஃது என் தவப்பயன் இருந்தவாறு.


பாடல் எண் : 08
இழை தழுவு வெண்ணூலும் மேவு திருமார்பின் 
ஈசன் தன் எண்தோள்கள் வீசி எரியாடக்
குழை தழுவு திருக்காதில் கோளரவம் அசைத்து 
கோவணம் கொள் குழகனை குளிர் சடையினானைத் 
தழை தழுவு தண்ணிறத்த செந்நெல் அதன் அயலே 
தடந்தரள மென் கரும்பின் தாழ்கிடங்கின் அருகே 
கழை தழுவித் தேன் கொடுக்கும் கழனி சூழ் பழனக் 
கானாட்டு முள்ளூரில் கண்டு தொழுதேனே.

பாடல் விளக்கம்:
பாம்பாகிய அணிகலமும், அதனோடு சேர்ந்த வெண்மையான முப்புரிநூலும் பொருந்திய அழகிய மார்பினையுடைய கடவுளும், தனது எட்டுத் தோள்களையும் வீசி நடனம் ஆடுதற் பொருட்டு, குழை பொருந்திய காதில் கொடிய பாம்பையும் இட்டு, உடையைக் கோவணமாக உடுத்த அழகனும், கங்கை நீராற் குளிர்ந்த சடையை உடையவனும் ஆகிய இறைவனை, அடியேன், தழைத்தலை உடைய பசுமையான நிறத்தையுடைய செந்நெற் பயிரின் பக்கத்தில், பெரிய முத்துக்களை உடைய மென்மையான கரும்பின் ஆழ்ந்த கிடங்குகளின் அருகே வண்டுகள் அக்கரும்பைப் பொருந்தித் தேன் கூட்டை அமைக்கின்ற வயல்கள் சூழ்ந்த பண்ணைகளையுடைய திருக்கானாட்டுமுள்ளூரிற் கண்டு வணங்கப்பெற்றேன். இஃது என் தவப் பயன் இருந்தவாறு.


பாடல் எண் : 09
குனிவு இனிய கதிர் மதியம் சூடு சடையானைக் 
குண்டலம் சேர் காதவனை வண்டினங்கள் பாடப் 
பனி உதிரும் சடையானைப் பால் வெண்ணீற்றானைப் 
பல உருவும் தன்னுருவே ஆய பெருமானைத் 
துனிவு இனிய தூய மொழித் தொண்டை வாய் நல்லார் 
தூ நீலம் கண் வளரும் சூழ்கிடங்கின் அருகே 
கனிவு இனிய கதலி வனம் தழுவு பொழில் சோலைக் 
கானாட்டு முள்ளூரில் கண்டுதொழுதேனே.

பாடல் விளக்கம்:
வளைந்த இனிய ஒளியையுடைய சந்திரனைச் சூடியதும், வண்டுக் கூட்டங்கள் பாட, நீர்த்துளிகள் சிந்துகின்றதுமாகிய சடையினையும், குண்டலம் பொருந்திய காதினையும் உடையவனும், பால்போலும் வெள்ளிய நீற்றை அணிந்தவனும், எல்லா உருவங்களும் தன் உருவமேயாய் நிற்கின்ற பெருமானும் ஆகிய இறைவனை, அடியேன், தூய நீலோற்பலங்கள், ஊடலிலும் இனியன வாயும் தூயனவாயும் தோன்றும் மொழிகளையும், கொவ்வைக் கனிபோலும் வாயினையும் உடைய அழகிய பெண்கள்போலக் கண் வளர்கின்ற, நிறைந்த கிடங்கின் அருகில் உள்ள, பழங்களைப் பழுத்த, இனிய வாழைத் தோட்டங்களைப் பொருந்தியுள்ள சோலைகளையுடைய திருக்கானாட்டுமுள்ளூரிற் கண்டு வணங்கப்பெற்றேன். இஃது என் தவப்பயன் இருந்தவாறு.


பாடல் எண் : 10
தேவியம் பொன்மலைக்கோமன் தன் பாவையாகத் 
தனதுருவம் ஓருபாகம் சேர்த்துவித்த பெருமான்
மேவிய வெந்நரகத்தில் அழுந்தாமை நமக்கு 
மெய்ந்நெறியைத் தான் காட்டும் வேதமுதலானைத்
தூவியவாய் நாரையொடு குருகு பாய்ந்து ஆர்ப்ப 
துறைக் கெண்டை மிளிர்ந்து கயல் துள்ளி விளையாடக்
காவிவாய் வண்டுபல பண் செய்யும் கழனிக் 
கானாட்டு முள்ளூரில் கண்டு தொழுதேனே.

பாடல் விளக்கம்:
அழகிய பொன்மலைக்கு அரசன் மகள் தனக்கு மனைவியாய் வாய்க்க, அவளைத் தனது திருமேனியில் ஒருபாகமாகச் சேர்ந்திருக்கும்படி வைத்த பெருமானும், பாவிகள் விரும்பும் கொடிய நரகத்தில் வீழாதபடி நமக்கு மெய்ந்நெறியைக் காட்டுகின்ற, வேதத்தால் துணியப்பட்ட முதற்கடவுளும் ஆகிய இறைவனை, சிறகுகள் வாய்ந்த நாரைகளும், குருகுகளும் பறந்து ஒலிக்க, நீர்த் துறைகளில் கெண்டை பிறழ, பிற மீன்கள் துள்ளி விளையாட, குவளைப் பூவின் கண் வண்டுகள் பலவகையான இசைகளைப் பாடுகின்ற வயல்களையுடைய திருக்கானாட்டுமுள்ளூரிற் கண்டு வணங்கப்பெற்றேன். இஃது என் தவப்பயன் இருந்தவாறு.


பாடல் எண் : 11
திரையினார் கடல் சூழ்ந்த தென்னிலங்கைக் கோனைச் 
செற்றவனை செஞ்சடைமேல் வெண் மதியினானைக் 
கரையினார் புனல் தழுவு கொள்ளிடத்தின் கரைமேல் 
கானாட்டு முள்ளூரில் கண்டு கழல் தொழுது
உரையினார் மதயானை நாவல் ஆரூரன் 
உரிமையால் உரைசெய்த ஒண் தமிழ்கள் வல்லார் 
வரையினார் வகை ஞாலம் ஆண்டவர்க்கும் 
தாம்போய் வானவர்க்கும் தலைவராய் நிற்பர் அவர் தாமே.

பாடல் விளக்கம்:
புகழ் மிகுந்த, மதம் பொருந்திய யானையையுடைய திருநாவலூரில் தோன்றிய நம்பியாரூரன், அலையால் நிறைந்த கடல் சூழ்ந்த தென்னிலங்கைக்கு அரசனாகிய இராவணனைச் செருக்கடக்கியவனும், செம்மையான சடையின்மேல் வெண்மையான சந்திரனை அணிந்தவனும் ஆகிய இறைவனை, கரையின்கண் நிரம்பிய நீரைப் பொருந்திய கொள்ளிட நதியின் கரைமேல் உள்ள திருக்கானாட்டுமுள்ளூரிற் கண்டு அடிவணங்கி, வணங்கப்பெற்ற அவ்வுரிமையினால் பாடிய இவ்வொளி பொருந்திய தமிழ்ப்பாடலைப் பாட வல்லவர்கள், எல்லையாற் பொருந்திய வகைகளையுடைய நிலவுலகத்தை ஆளுகின்ற அரசர்கட்கும் தலைவராய், பின்பு சென்று வானுலகத்தார்க்கும் தலைவராய் நெடிது வாழ்வர்.


|| --- திருக்கானாட்டுமுள்ளூர் திருமுறை பதிகம் முற்றிற்று --- ||


|| ----------- திருச்சிற்றம்பலம் ----------- ||

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக